Friday, November 20, 2009

தலை நகரம்

ஒரு நாட்டிற்கு தலை எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தலைநகர் என்பதும்.இது மாவட்டம் வட்டம் கிராம பஞ்சாயத்து அளவு பொருந்தக்கூடியது.தமிழகத் தலைநகர் அல்லது தமிழர் தலைநகர் என்கிற அளவில் சென்னை புரிந்துகொள்ளப்படுகிறது.இப்போதைய அளவில் சம காலப் பிரக்ஞையில் வேறொரு தலைநகருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தமிழ் நாட்டின் தலைநகராக திருச்சியைக் கொண்டுவருகிற ஒரு திட்டம் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு இருந்தது.

அப்போது அவரது கனவு முகமது பின் துக்ளக்கின் தலை நகர் மாற்றத் திட்டத்தோடு அப்போதைய ஊடகங்களால் ஒப்பிடப்பட்டது. தலை நகர் மாநிலத்தின் மையத்தில் இருக்கவேண்டும் என்கிற கருத்தை எம்.ஜி.ஆர் சொன்னார். கன்னியாகுமரி முடியவும் பாலக்காடு வரையிலும் நீண்டிருக்கிற மக்கள் பரப்பின் நலனைக் கணக்கிலும் கருத்திலும் எடுத்தால் அது நல்ல திட்டம்.

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ,’தலைநகர் மையத்தில் இருக்கவேண்டுமா?-அப்படியானால் மனிதனுக்கு மூளை என்ன வயிற்றிலா இருக்கிறது?’ என்றொரு தர்க்கக்கேள்வியை எழுப்பினார்.

உண்மையில் மனிதனுக்கு வயிற்றில் மூளை இருந்ததைத்தான் அப்போதைய நிகழ்வுகள் வெளிச்சமிட்டுக்காட்டின. ஊடகர்களுக்கு சினிமாக்காரர்களுக்கு நாட்டின் கதிப்போக்கை நிர்ணயிக்கும் தொழிலதிபர் பலருக்கு அப்போது சென்னையில் சொத்து இருந்தது.இப்போதும் இருக்கிறது. அனைவரும் எம்.ஜி.ஆருக்கு எப்போதும் இருந்த கோமாளிப்பட்டத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகைச் செருகினார்கள். திட்டம் தோற்றுப்போயிற்று.

திருச்சி தலை நகராகக் கிடைத்திருக்குமெனில் கொஞ்சம் நாறியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆறு டி.எம்.சிக்காக மழையற்ற காலங்களில் போராடிக்கொண்டிருக்கிற நிலைமை வந்திருக்காது.

வம்புவழக்குகள் முதல் வாய்ப்பு நிமித்தம் வரை தொட்டது தொண்ணூறுக்கும் சென்னை போகிற களியக்காவிளைக் காரராக இருந்து நீங்கள் பார்த்தால் திருச்சியின் பலாபலன் யூகிக்கக்கூடியது. மூளை வயிற்றிலும் இருக்கலாம். மொய்ம்புற்ற புலன்கள் அதிகம் தலையிலே இருப்பதால் மூளை தலையில் இருக்கிறது.அவ்வளவே. இப்போது காலம் கடந்துவிட்டது.

தலைநகர் என்பது அன்னிய நாட்டு வேந்தர்கள் தொழில்வேந்தர்கள் வந்து தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள இருபது நிமிடங்களில் பார்வையிட்டுச் செல்ல தோதாக இருக்கவேண்டும் என்கிற நமது உபசார மனத்திலிருந்து எழுகிறது சென்னை மட்டுமே தலைநகர் என்று நினைப்பது.

இந்தியாவின் ஆன்மா கிராமத்தில் இருக்கிறது. ஆன்மாவினால் யாருக்கும் லாபம் கிடையாது. அதன் பேரைச் சொல்லி வயிறு செல்வாக்கு வளர்த்துவோர் தவிர.

ஆன்மாவும் வயிற்றில்தான் இருக்கிறதோ என்னவோ!

5 comments:

Rajan said...

//எம்.ஜி.ஆருக்கு எப்போதும் இருந்த கோமாளிப்பட்டத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகைச் செருகினார்கள். //

எல்லாரும் அதெல்லாம் மறந்துட்டாங்க ! விடுங்க தலைவா ! செத்துப் போன மனுசன எதுக்கு ஓட்டிட்டு !

adhiran said...

sattunu mudinchudichchu.. innum ezhuthiyirukalaam. nammaloda thalainagaram eppothum trichy thaana!!!!

விஜய் said...

திருச்சி தலைநகரமாக்குதல் மிக முக்கிய ஒரு நிகழ்வாகும். எந்த பகுதியில் இருந்தும் எட்டு மணி நேரத்தில் திருச்சியை அடையலாம். சென்னை அப்பிடியா. இதை இலவச அரசு கவனத்தில் கொள்ளுமா ?

ஸ்ரீராம். said...

"இலவச அரசு"... நன்றாகச் சொன்னீர்கள் விஜய்...

சங்கர் said...

இன்றைய சூழலில், டில்லிக்கு தந்தி அடிக்கும் செலவு, சென்னைக்கும் திருச்சிக்கும் வேறுபடுவதில்லை, மாற்றிவிடலாம்