Friday, August 20, 2010

கொட்டும் மழையில்...

இந்த சுதந்திர தினத்தில் சென்னையில் கொட்டும் மழையினூடாக கோட்டையில் கொடி ஏற்றி வைத்து அதற்கு முன்னமோ பின்னரோ ஒரு அறிவிப்பை முதலமைச்சர் மு. கருணாநிதி வெளியிட்டதாக அறிகிறேன்.

சில அறிவிப்புகள் கேட்ட உடனே மகிழ்வுதரும். சில எரிச்சல் தரும். இவ்வறிவிப்பு முதல் வகையைச் சேர்ந்தது என்னளவில். விவசாயிகளுக்கு இலவச மோட்டார் என்பதே அது. பம்ப் செட்டுகள் அதில் அடக்கமா என்பது தெரியவில்லை. இலவசமாகப் பெற்றுக்கொள்வதன் மனச் சங்கடத்தை பல பிரிவினரைப் போலவே உழவர்களும் இழந்தாயிற்று என்பதால் வினியோகச் சிக்கல் இல்லை. இதில் என்ன சங்கடம். நம்ம அரசு நாம் அதன் மக்கள். இதன் சலுகைகளை நாம் நன்கு அனுபவிக்க வேண்டியதுதான். மருத்துவர் ராமதாஸ் சொல்கிறபடி விவசாயிகளுக்கு மாதம் ஐந்தாயிரம் பத்தாயிரம் மானியம் கிடைத்தால் இன்னும் உவப்பானது.

இந்த மின் மோட்டார் உண்மையிலேயே பயனுள்ளது.பாட்டன் காலத்து மோட்டார்கள் பலபக்கம் உள்ளன. இந்த புது மின் மோட்டார் வழங்கும் அதே நேரத்து மின் இணைப்புகளை பெயர் மாற்றித் தந்துவிடலாம். பல மோட்டார்கள் 60 களில் வாங்கி இன்னும் அமரராகிப் போனவர்களின் பெயரில் இருக்கின்றன. மோட்டார்களில் விலை கூடிய பகுதி காயில் என அறியப்பெறும் செம்புக் கம்பிச் சுற்று மட்டுமே. மற்றவை இரும்பாலானது. மொத்தமாகத் தயாரிப்பதில் அரசுக்கு செலவு அதிகம் வந்துவிடாது.

பழைய மோட்டார்கள் இழுக்கும் மின்சாரத்தை விட குறைவான மின்சாரத்தையே புதுத் தொழில் நுட்ப மோட்டர்கள் உறிஞ்சும் என்றால் இயந்திரத்துக்கான காசு இரண்டே வருடத்தில் மின்சேமிப்பு மூலமாகவே தமிழ்நாட்டுக்கான பொதுப் பயனில் வந்துவிடும்.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டியது இன்னும் ஏராளம் உள்ளது. அதைப் பற்றி நூலே எழுதலாம். நூற்கள் தமிழ் நாட்டில் என்னென்ன பயனை விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. அது அங்கேயே நிற்க.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டிய முதலாவது வேலைகள். ஒரு ஒன்றியத்துக்குள்ளேயே இருக்கிற விவசாய ஆஃபீசர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இடைவெளியை ஆயிரம் கிலோமீட்டர்களில் இருந்து குறைப்பது. அடுத்தது... விவசாயம் என்றால் என்ன என்று தெரிந்தவர்களை விவசாய ஆஃபீஸ் வேலைக்கு எடுத்துக்கொள்வது.

அடக் கடவுளே.... நல்லது பண்றதுல இவ்வளவு கஷ்டம் இருக்குதா?!

1 comment:

adhiran said...

நீ விவசாயம் பண்றேன்னு மட்டும் தெரியுது!