Monday, August 30, 2010

அச்சம் மடம் நாணம்...

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு... என்கிற அடுக்குச் சொற்களை தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் பதின் வயதுகளுக்குள் கேட்டுவிடமுடியும். நானும் அப்படிக் கேட்டு அது மனனம் கூட ஆகியும் நான்காவது வார்த்தையான பயிர்ப்புக்கு வெகு காலம் அர்த்தம் தெரியாமல் இருந்தது.

 இப்பவும் ஒரு குழப்பம் உண்டு. ஆணின் அங்கம் வயது வந்த பெண்ணின் மீது படுகையில்ப் படர்கையில் ஏற்படுகிற உணர்வுதான் பயிர்ப்பு என்பதா அல்லது, “ பயிர்மை’ என்கிற உயிர் நீட்டுத் தன்மை கொண்டு உயிர்த்தொடர்ச்சி நடத்தும் தகைமை பெண்களுக்கு இருப்பதால் ‘பயிர்ப்பு ‘ என்கிற சொல் தொடர்கிறதா என்பதும் மொழி ஆய்வாக இருக்கிறது எனக்கு. தமிழ்ச் சங்கம் தீர்க்காததை தனியாக யாரும் தீர்த்துவைத்தாலும் மகிழ்வே.

இதனிடையே பயிர்ப்பு என்றால் என்னவென்று மக்களிடம் நான் விவாதம் தொடங்கும் முன்னே ஊர்க்காட்டு நாடகத்தில் அதைப் பற்றிக் கேட்டது முதாலாவது சிரிப்பைத் தந்தது.

நாடகம், கரகாட்டம் முதலியவற்றில் பின் சொல்வதை நிகர்த்த பத்துக்கும் மேற்பட்ட கொச்சைகள் என்னிடம் உண்டு. எளிய மனதோர் ,இருதய பலவீனமுள்ளோர்,ரொம்ப நல்லவங்க ஆகியோர் இதைப் படிக்கவேண்டாம். (குறிப்பாக தேனிக்காரன்.ஹைதராபாத் ஆறுமுகம்).

கூத்தில் காமிக் பெண்ணிடம் பபூன் வினவுவது இப்படி, “ ஏம்மா! பொம்பளைகளுக்கு இருக்கவேண்டிய அச்சம் மடம் நாணம் பயிப்பு எதாவது உங்கிட்ட இருக்கா?” - பைப்பு என்கிற சொல் சில அளவுகளில் பொருத்தப் பாடுகளுடன் இயைந்து சுவை கூட்டியது. அதிலும் பைப் என்பது முப்பாலருக்கும்பொருந்துவது அல்லவா?

ஒரு விதமாக தவறாகவேனும் பயிர்ப்பு என்றால் என்னவென விளக்கும் நிலைக்கு நான் வந்திருக்கிற நிலையில் நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. சென்று வந்த ஒரு திருமணம் , திருநெறிய தமிழ் முறைப்படி நடந்தேறியது.தமிழில் தான் பாடல்கள் ஓதுதல் எல்லாம். பெண்ணின் நல்லாலொடும் பெருந்தகை இருந்ததே... உட்பட ஏராளம் நல்ல சைவப்பண்கள் கேட்டேன்.

தமிழ் முறைப்படி இப்படி நடக்கும் திருமணங்கள் வைணவத்தில் நடக்கிறதா தெரியவில்லை. பவளச் செவ்வாய் ,கமலச் செங்கண் ,புடைபரந்து விரிந்து கரியவாய பேதமை செய்யும் பெரியவாய.... மொழியையும் விழியையும் வைத்துக்கொண்டு வைணவத்தில் இவ்விதம் தமிழ்கூறி மணங்கள் நடக்கவில்லையெனில் அது அரங்கனின் அரங்கத்துக்கு ஓர் அபவாதமே.
நிற்க.

நேற்று நன்விதம் மங்கலம் செய்வித்த ஓதுவாராகப் பட்டவர் முக்கியமான ஒரு இடத்தில் வழுவினார். சுவையான வழு அது. பெண் வாக்குறுதியில் அச்சம் மடம் நாணம் பெயர்ப்பு ஆகியன கொண்டு ஒழுகுவதாக பெண்ணை சொல்லச் சொன்னார். என் மாமா மகளும் அப்படியே சொன்னாள். விபரீதமான இடங்களில் சிரித்துவைக்கிற வியாதி பீடித்திருப்பதால் இப்போதெல்லாம் மேடைகளுக்கு அருகில் அமர்வது இல்லை. பலரின் பகை தவிர்க்க அரங்கக் கடைசிகளிலோ அல்லது வெளியிலோ நின்றுவிடுகிறேன்.

பெயர்ப்பு என்றதும் சிரிப்பு வந்துவிட்டது. பயிர்ப்பின் காலம் போய்விட்டது. பெயர்ப்பு என்று சரியாகத்தான் சொல்கிறாரோ. புக்ககம் போனதும் முதல் ஜோலியாக பயலை தனிக்குடுத்தனத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

No comments: