Monday, August 30, 2010

நேற்று... இன்று... நாளை(விடுமுறை விண்ணப்பம்)

எல்.ஆர். ஈஸ்வரி பாடும் பாடல்களில் ஒன்றில் , ‘நேற்றாகி இன்றாகி நாளாகினாள்..’ என்று ஒரு வரி வரும். இந்த நாள் என்பதில் நாளை என்கிற பதமும் ஒளிந்து கிடப்பது கண்டு நாளும் வியக்கிறேன். இந்தப் பகிர்வை எழுதுமுன் அம் மணி நினைவுக்கு வந்ததும் உயர்வுச் சிலிர்ப்பூட்டுகிறது. அனேகமாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பகிர்வுகள் எழுத இயலாதென நினைக்கிறேன்.

 கல்நார்க் கூரை வீட்டு விதானத்தை காங்கிரீட் மெத்துவதான ஏற்பாட்டில் கூரை பிரித்துக் காரை மேயும் ஏற்பாடு. மெத்தை வீடு மெத்த் அவசியமல்லதான் என்றாலும் அப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்கிற சுற்றத்தின் எண்ணமும் செயல்பாடும். இதில் என் பங்கு சித்தாள் வேலை செய்வது தவிர்த்து ஒரு சுக்கு ஒரு காசு எதுவும் கிடையாது.

எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் சமயங்களில் இன்னுமொரு அறை இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் என்பார் டால்ஸ்டாய்.(புத்துயிர்ப்பு நாவலின் முதல் வாக்கியம் இது.)எனது கனவு வீடு வேறு மாதிரியானது. ஆனால் அது கட்டட அமைப்பு சம்பந்தப் பட்டது அல்ல. கட்டமைப்பு சம்பந்தப்பட்டது. அது நிறைவேற நான் மறுபிறவிகள் கொள்கையை நம்பவேண்டும்.

மாமனாரின் சொல்படி ‘தேவையில்லாத புத்தகங்களை ‘ மேற்சாலையில் ஏற்கெனவே போட்டாயிற்று. இந்த தேவையில்லாத என்பது புத்தகங்களுக்கு அவர் தருகிற உரிச்சொல். இதை எதிர்த்து வாதாட எனக்குத் தெம்பில்லை.கணினியும் நாளையோ மறுநாளோ பொதியப்பட்டுவிடும். நெட்டும் செட்டுமாயிருக்கிற இந்தக் கணினியை ஒரு இருமாதத்துக்கு அயலில் ஐநூறு ஐநூறு மீட்டர்களில் சூழ்ந்து நிற்கிற இரண்ட்ல் ஒரு கிராமத்தில் போட்டுவைத்து எளிய அளவில் அங்குள்ள குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளலாம் என்கிற ஆசைகூட இருக்கிறது. இதெல்லாம் ஆசைதான்.

மாமனாரும் மனைவியும் மாமியுமே பலசமயங்களில் இவனை ஏண்டா சேத்துக்கிட்டோம் என விதியை நோகும்போது கிராமத்தில் புதிதாக தேவதைகள் சாத்தான்கள் எதுவும் வேண்டாம்.கிராமம் தனது வழக்கமான கதியில் தரிக்கட்டும். கரையானும் அரிக்காது என்கிற நம்பிக்கையோடு புதிய கூடாரத்தில் கணினியைப் போட்டுவைக்கப் போகிறேன். புத்தகம் உள்ள தனிக் கூடாரத்தை வாதைகள் மற்றும் கரையானும் அரிக்காத சுவிசேஷம் கிடைக்க இயற்கை அருளட்டும்.

ஆக, இந்த இரண்டு மாதங்களுக்கும் (அல்லது அதற்கும் மேல்சில நாட்களுக்கு) கணினியில் எழுதிப் பகிரும் வாய்ப்பில்லை. இடையில் எப்படியாவது எழுதவும் பகிரவும் வாய்க்கும் எனில் அது வள்ளுவத்தை எடுத்துக்காட்டும்.

‘ஊழிற் பெரு வலி யாவுள...’

2 comments:

ny said...

//அது நிறைவேற நான் மறுபிறவிகள் கொள்கையை நம்பவேண்டும்//

:)

பத்மா said...

:(