Sunday, August 1, 2010

iஇன்று நண்பர் தினமாம்... சொல்றாங்க...

தூக்கத்திலிருந்து கண்கள் விழித்து மூளை முழுதும்  விழிக்காத (இது ஒரு பாவனை) காலையில் அதிகாலையில் வெளிநாட்டிலிருந்து தோழி தன் பேச்சின் பலதினூடே சொன்னாள். இன்றைக்கு ’நண்பர்கள் தினம்’ என்று. ஓகோ எனக் கேட்டுக்கொண்டேன்.

புன்னகை ,கண்ணில் ஒரு மின்னல், உளக் கிளர்ச்சி  எதுவும் தோன்றவில்லை எனக்கு.எப்படி இருந்த நான் இப்படி ஆயிப்போயிட்டேனே... என்று தோன்றினாலும் அரசியல் காரணங்களுக்காக தினங்கள் ஏனோ உவப்பளிப்பதில்லை.

தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்? - என அப்துல் ரகுமான் கேள்விகேட்ட நாளிலிருந்து இந்த தீர்க்கமுடியா வியாதி தோன்றியிருக்கவேண்டும். ஆனாலும் பாருங்கள் தமிழ் அரசியல் சூழலில் வானம் பாடிகள் ஒரு ஃபீனிக்ஸ் தான். இன்னும் எவ்வெவற்றுக்காக அவர்களை
அவர்களது சொற்களை நினைவுகூரப்போகிறேன் என நினைக்கும்போது தீப ஆவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் ஆகியனவற்றுக்கும் மகிழ்வைத் தொலைத்துவிடுவேன் என பயமாக இருக்கிறது.

பெயர்ச்சொல் பிளாக்கில் ஒரு வாழ்த்து அட்டையையும் படத்தையும் பார்த்தபோது நமக்கு ஒரு படம் போட்டு பிளாக் எழுதத் தெரியலியே என வருத்தமாக வந்தது.

முதல் மரியாதை வீராச்சாமிக்கு உள்ள ஏக்கத்தை நிகர்த்தது இது. சிவாஜியிடம் வீராசாமி முறையிடுவதுஅது .( படத்தில் பெருசின் பாத்திரப் பெயர் நினைவில்லை.வீராசாமி வந்து செங்கோடன்)

‘’சாமி உங்க காலுக்கு ஒரு செருப்பு தெச்சுப் போடணும்னு இந்த செங்கோடனுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்க!”

கட்டிய பெண்டாட்டியை ஃபிட்டிங்ஸ் போடாமல், மாமனார் காலில் விழுந்தார் என்பதற்காக செருப்பும் போடாமல்  செங்கோடனின் செருப்புத் தைக்கும் தொழிலுக்கு குந்தகம் விளைவித்து செங்க்ஸை முள் எடுக்க விட்டு ... எசப் பாட்டுப் படித்ததைத் தவிரவும் பாசி கோர்க்க முடி பிடுங்கித் தந்ததைத் தவிரவும் ( எதுக்கு எதை செய்யணுமோ அதை செய்யவே மாட்டியா பெருசு?)
பெருசு அந்தப் படத்தில் எதுவும் செய்யவில்லை. நிற்க...

நான் செய்து கொண்டிருந்த காரியம் நட்புக்கு மரியாதை பற்றி எழுதிக்கொண்டிருந்ததல்லவா? ’நட்டல்’(அய்யன் சொல்) பற்றி ‘நட்பதிகாரம்’ என சொல் நீக்கி வள்ளுவன் எவ்வளவோ சொல்லியிருக்கக் கூடும். நட்பு இருவகைப் படும் ஒன்று கொண்டாடப் படவேண்டிய நட்பு மற்றது பந்தாடப் படவேண்டிய நட்பு. பந்தாடுதல் என்றால் அது அரங்கத்துக்கும் வெளியே போய் நம் ஜீவிய காலத்துக்கும் கண்ணிலேயே படக்கூடாது- அந்தப் பந்து அந்த பந்தம்..

இப்படியெல்லாம் அன்பும் வன்மமும் ஒருங்கே பூண்டு மண்ணில் நல்லவண்ணம் வாழ ஆசையாய் இருக்கிறது. செய்திகள் வந்த அளவில் ’நட்டல் தினம்’ பற்றிய தகவலுக்கு அனிச்சையான நன்றிகள்.

இன்னும் இருபத்தி நாலு மணித்தியாலத்துக்கு ஒரு ஆம்பளைக்கோ ஒரு பொம்பளைக்கோ ஒரு மூணாம் பாலுக்கோ நானாகப் போன் பேசுவதில்லை என முடிவு செய்துவிட்டேன்.

நட்புக்கொள்கை-தற்காலிகக் கோட்பாடு- குடும்பத்துக்கு ஒவ்வாது என நினைக்கையில் பயமாக இருக்கிறது. any way...மானிலம் எல்லாவும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே....

1 comment:

நேசமித்ரன் said...

இந்தத்தலைப்பின் புதுமை நல்லாருக்கேண்ணே :)

நண்பர்கள் தின வாழ்த்துகள்