Thursday, November 18, 2010

ஜரகண்டி... ஜரகண்டி.

நேற்று முன் தினம் திருப்பதியில் 85 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். உண்டியல் வருமானம் ஒரு கோடியே ஐம்பத்தியைந்து லட்சம். (தகவலுக்கு நன்றி : தினத் தந்தி).

நான் இன்னும் திருப்பதி போனதில்லை என்கிற உண்மையிலிருந்து இதை எழுதப் போகிறேன். (மன் மோஹனையும் ராசாவையும் நேரில் பார்த்துவிட்டா மேடைகளில் திட்டுகிறார்கள் அதுபோலத்தான் இதுவும்.)

300 - ரூபாய் கொடுத்து வைகுண்டம் கியூ காம்ப்லெக்சில் காத்திருந்த பக்தர்கள் ( இவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும் நேரடியாக அந்த மாயா வைகுண்டத்தில் போய் இறங்கிவிட்டால் எப்படித்தான் இருக்கும்.)

நின்று கொல்லும் அல்லது நின்று பாலிக்கும் தெய்வத்தைப் பார்ப்பதற்காக காத்திருந்த ப(க்)தர்களில் சிலர் அறை ஒன்றில் இருந்த டி.வி... அறைக் கதவு ஆகியனவற்றை உடைத்திருக்கிறார்கள் என்பது செய்தி. ஒரு நாளில் உண்டியலில் இத்தனை பணம் விழுவதெல்லாம் இயல்பு வாழ்வின் குற்றச் செயல்பாட்டு விகிதாச்சாரம் அதிகரித்திருப்பதன் எடுத்துக்காட்டுகள்.

முடி உள்ளவன் காணிக்கை கொடுக்கிறான். பக்தர்கள் எண்ணிக்கை இவ்வளவு அதிகப்பட்டுவிட்டதால் ஏன் ஆந்திர அரசு இன்னும் கன்வெயர் பெல்ட் சிஸ்டத்தை கொண்டுவரவில்லை ?

பின்னாலிருந்து எவராவது முகம் அறிமுகமில்லாத முண்டங்கள் விலாவில் நெட்டித் தள்ளினால்தான் தரிசனம் பூர்த்தி அடையுமோ என்னவோ.

ஆனால் ஒன்று புரிந்துவிட்டது ஆழ்மனதின் மதமும் குறியீட்டு வடிவங்களும் இப்போது நாம் காண்பவை அல்ல. கற்கால ஆயுதங்களும் வேட்டை வேட்கையுமே நம் மதம். நல்ல விழா நாளில் முப்பத்தியிரண்டு அறைகளை பதினாறாகக் குறைத்துக் கூட்டத்தைச் சேர்த்துப் பார்த்தால் பாலாஜியே இதை ஒப்புக்கொள்வார்.

No comments: