Wednesday, February 9, 2011

ஒரு தேநீர்க்கடை ஞாபகம்....

இன்றைக்கெல்லாம் அது நடந்து பதினைந்து பதினாறு ஆண்டுகள் இருக்கும். மதுரையில் - திருப்பரங்குன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டினை ஒட்டிய த.மு.எ.ச வின் கலை இரவு.

பலபேர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பேச்சாளர் மேடையேறுவதற்கு முன்பாக தேநீர் அருந்தலாமே என்றார்.நானும் செல்வனும் (அப்போது மதுரை இப்பொழுது கோயமுத்தூர்) அவரும் தேநீர்க்கடை நோக்கிச் சென்றோம். அவரைச் சுற்றி (என் போன்ற சிறுவர் குழாமும்) இளைஞர் பட்டாளமும் ஒரு இன்முக வசீகரிப்பில் ஒருங்கிச் சூழவே இருக்கும். ஆகவே டீக்கடை ஏகுமுன் எண்ணிக்கை அதிகரித்தது இயல்பான செயலே.

தேநீர் மேஜையாளர் ‘’எத்தனை டீ?’’ என்றதும் அவர் தலைகளை எண்ணினார். அல்லது முகங்களை எண்ணினார் என்று சொல்வது பொருத்தமே எனினும் அவரது உயரத்திற்கு தலைகளை எண்ணினார் என்று சொல்வதே பொருத்தம்.

(இலக்கியப்பேச்சுகள் மனதில் தேங்கி ரீங்காரம் குறையாமலிருந்த மொழிச் சுழல்வு சூழலைப் புலமெனக் கவ்வியிருந்தது)

‘’ஒன்னு, ரண்டு,மூணு,நாலு,அஞ்சு,ஆறு’’ தேநீர்க்காரரிடம் திரும்பினார்.’’ஆறு. டீ ஆறு. ஆரு... நீ ஆரு நான் ஆரு?’’  சுற்றிலும் மகிழ்வும் நெகிழ்வுமான சிரிப்போசை கவ்வியது. கூடக் குறையச் சுவைகளைத் தோற்றுவிக்காத ஒரே தேநீரை ஆறு பேரும் பருகினோம் என்றுதான் தோன்றியது.

அந்தப் பேச்சாளர் , பேச்சாளர் என்று அறியப்பட்டிருந்தாலும் சிறுகதை எழுத்தாளர் என்று தெரியப்படுத்த மறுபடி ஒரு தசாப்தம் தேவையாயிருந்தது. அன்றைக்கு வெறும் தவணைக்குத் துணி வைப்பவனாய் அறியப்பட்டிருந்த எனது கவிதைகள் சில்வற்றை வாங்கி திருச்சியில் நந்தலாலாவுக்கு அனுப்பி ‘சோலைக் குயில்களில்’ பதிப்பித்தார்.

பேரெழில் வாய்ந்த கையெழுத்துக்கு உரிமையாளராகிய அவர் இரண்டு குறும் படங்களையும் இயக்கியிருக்கிறார். 1.ராமய்யாவின் குடிசை 2.என்று தணியும்.

திடீரென அவரது வலைப்பக்கம் குறித்த தகவலை ‘அடர் கருப்பு’ வலைப்பக்கத்தில் பார்த்து விட்டு இன்று வாசித்தேன். அவரது நேற்றைய பதிவுதான் எனது இன்றைய பதிவையும் நினைவையும் கிளறியது. அதுவும் ஒரு தேநீர்க்கடைச் சம்பவம்.

( முன்னிரு முரசங்கள் தாமே அதிர.... நானும் அவரும் மதுரையில் சுற்றித் திளைத்த மீனாட்சியம்மன் கோவிலெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அவ்வவற்றின் ஞாபக அடுக்குகளின் பிரகாரம்)

அவருடன் ஒரு தேநீர் அருந்தி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. அந்தத் தருணத்தை விடவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியாகும் நாள் ஒன்றினைத்தான்.

மீதமுள்ள பார்வைக்கு unmaiputhithandru.blogspot.com.

1 comment:

bharathi krishnakumar said...

எங்கே இருக்கிறாய் நீ
எப்போது சந்திக்கலாம் நாம்