Saturday, February 12, 2011

மேல் நிற்றல்

கீழே நிற்பவருடன் உரையாட
என்ன இருக்கிறது?
அவர் மேல் நோக்கி
விழிகளை உயர்த்தும் போதே
இரைஞ்சுகிற பாவனை வந்துவிடுகிறது.
கேள்விகளுக்கும் பதில்களுக்கும்
இடையில்
உண்மை ஒளிந்துகொண்டு விடுகிறது.

உடனடியாக ஒரு ஏணி
தேவைப்படுகிறது எனும்போது
அது
நமது பரணில் இருப்பதும்
நினைவுக்கு வந்தாலும் அதை
எடுத்துத் தர மனங்கொள்வதில்லை.

அவர் ஏறி வருகிறபோதே நாம்
இறங்கிச் சென்றுகொண்டிருப்பதான
காட்சி பற்றிய சித்திரம்
வந்து மருட்டுவது
காரணமாயிருக்கலாம்.அல்லது
உரையாடல் நமது சுகத்திலும்
லாபத்திலும் பங்கு வைப்பதை
நோக்கிச் சென்றிடக்கூடாது
என்பதும் கூட.

கீழ் நிற்பவர் முறைத்தார் என்றால்
ஐயமேயில்லை அவர்
சட்டத்திற்குப் புறம்பாக
இருக்கிறார். சரி உரையாடலை
துண்டித்துக்கொள்ளலாம்.

என்றேனும் அவர் சமக் கட்டில்
வந்து முகத்தை நேராகப் பார்க்கும்
கணங்கள் வாய்த்து விடாதவாறு
சூழல் நம்மைக் காப்பாற்ற
வேண்டுமென
கண்ணறியாத மாயக்கரங்களை
வேண்டிக்கொண்டு
இந்தப் பரிமாற்றத்தை
இந்த அளவில் முறிக்கிறோம். பிறகு
கீழ் நிற்பவர் பார்வைக் கோணத்தில்
இருந்து
மறைகிறார்.

1 comment:

Pranavam Ravikumar said...

Very good one..! >> பிறகு
கீழ் நிற்பவர் பார்வைக் கோணத்தில்
இருந்து
மறைகிறார்.<<

Very true lines