Monday, March 7, 2011

பெண்களின் தினச் சேதி

பெண்கள் தினத்துக்கு வாழ்த்துச் சொல்வது அத்தனை சம்பிரதாயகரமாகவும் அலுப்பூட்டுவதாகவும் (ஆணியல் அடிப்படையில் உட்குமைந்திருக்கிற காமத்தின் பாற்பட்டு ) குற்ற உணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. ஆனாலும் சித்திரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பெண்கள் தினத்தைப் பற்றி எண்ணங்கொள்ளாமல் தள்ளிப்போடுவதும் சாத்தியமாகவில்லை.

பெண்கள் தினத்தை பெரும்பான்மை சனரஞ்சக இதழ்கள் ‘மகளிர் தினம்’ என விளிப்பதிலேயே தமது உள்ளங்கைக் கூட்டுக்குள் பெண்களை வைக்கவேண்டும் என்கிற மனோரீதி காணக்கிடைக்கிறது. இந்த ஆண்டின் பெண்கள் தினம் தமிழகத்தில் மிக அடுத்து தேர்தலைக் காணவுள்ள ஒரு நாளாக மலர்ந்துள்ளது(இதை ஒரு நாளின் மலர்ச்சியாகக் கொள்ளவேண்டுமேயல்லாமல் பெண் = மலர் என்கிற பாவனையில் கொள்ளவேண்டாம்).

அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்ற நூறுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடும் இரு கட்சிகளை விட்டுவிட்டு அடுத்துள்ள நிலையில் உள்ள கட்சிகளைப் பாருங்கள். காங்கிரஸ்,பா.ம.க, வி.சி. தே.மு.தி.க,கம்யூனிஸ்டுகள், கொ.மு.க,த.மு.மு, ம.தி.மு.க இப்படி ஏகப்பட்ட கட்சிகள் போட்டியிடப் போகின்றன. அவை விகிதாசார அடிப்படையில் பெண்களுக்கு எத்தனை எத்தனை இடங்கள் ஒதுக்கப்போகிறார்கள் எனப் பாருங்கள்.

(தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த மூன்றாம் பாலினரான ரோஸ் மற்றும் கல்கி ஆகியோருக்கு ஒதுக்கப்படுமா என்பது மூன்றாம் பிரச்னை: மூன்றாம் பிரச்சினை என்பதாலேயே முக்கியத்துவமற்ற ஒன்றாக அது மாறிவிடாது.லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு விசா கூடக் கிடைக்கவில்லை என்பதை அவர் தனது பதிவில் கொந்தளித்திருக்கிறார்.)

பெண்களுக்கு அவர்கள் சதாகாலமும் மசோதா நிலைப் பேச்சிலேயே உள்ள 33.333333  சதவீத ஒதுக்கீட்டைச் செய்கிறார்களா எனப் பார்க்கவேண்டும். (மிகச் சிக்கலான பாகா எண் இந்த 100.) அப்படி ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில் பெண்கள் தேர்தலை- வாக்களிப்பைப் புறக்கணித்தால் எப்படி  இருக்கும்  என யோசித்துப்பார்க்கிறேன். எட்டாந் தேதி ஒன்றில் எட்டாத காரியங்களைப் பற்றிச் சிந்திக்கநேர்ந்துவிட்டது ஆண்மையப் பிழையாக இருக்காது என்றும் நம்புகிறேன்.

No comments: