Monday, March 14, 2011

சாதிக்கட்சிகளின் நிலை- நிலைப்பாடுகள் - எழுச்சிதாழ்ச்சிகள்.

தமிழகத்தில் நிலவும் பல சாதிக்கட்சிகளின் பெயர்கள் கூட முழுதாகத் தெரியாத நிலையில் சில ஞாபகங்களில் இருந்து இதை எழுதுகிறேன். அப்படி பெயர் விளங்காமல் இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. வேட்புமனுக்கள் தாக்கல் படப்போகும் மூன்று நான்கு நாட்களுக்குள்
புதிதாக எதேனும் சாதி அமைப்புகள் தோன்றி போட்டிக்கு வந்துவிடவும் வாய்ப்புகள் உள்ளன.

சாதிச் சான்றிதழுக்குக் கஷ்டப்படும் இருளர்கள், தேவ கவுடா பிரதமரானதற்கு மகிழ்ந்த ஒக்கலிகர்கள், பலிஜா நாயுடுகள்.... என யாவரும் போட்டியிடலாம்தான். தமிழகத்தில் பொருளாதார மேம்பாட்டை எட்டிக்கொண்டிருக்கிற கவுண்டர்கள் ‘கொங்கு’ என்ற பேராலும் நாடார்களும் தனக்கென தனி இடம் பெற்றிருப்பதும் ஆதிதிராவிடர்கள் வழக்கம்போல தங்களது சதவீதத்துக்கும் ஏழ்மைக்குமான ஒப்பீட்டைக் கருத்திற்கொண்டு மிகையான இடங்களைச் சாதிக்காமல் போவதும் ஆழ்ந்த மிகச் சோகம் தரும் வருத்தத்தை என்னில் ஏற்படுகிறது.

மனத்தகவமைப்பில் சாதிவாரி அடுக்குகள் படலக் கோடாக தோன்றாத பட்சத்தில் சென்னையில் ஆரம்பித்து நெல்லைவரை புவிப்பரப்பு மீதான பயணத்தை மனதால் ஓட்டித்தான் இதை எழுதவேண்டியிருக்கிறது.

 தி.மு.க  அனுபவித்துவந்து சொப்பனாவஸ்தை நிலையைக் கருத்தில் கொள்ளாமலும் தன்னை வலுவுக்கு மீறி நம்பியதாலும் பூவை.ஜகன் மூர்த்தியார் அந்தக் கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். பேனர்களின் எண்ணிக்கை மட்டும் வெற்றியைத் தீர்மானிக்கும் என அவர் கருதியிருக்கக் கூடும். பத்துத் தொகுதிகளில் அவர் தனியாக நிற்கப் போகிறாராம். அந்த வட்டாரத்தில் அவரது சாதியினரின் மனநிலை எத்தகையதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

பா.ம.கட்சி தனது அரசியலின் தசாப்தங்களின் பாரம்பரியம் காரணமாகவும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதன் வாயிலாகவும் பரவலாகப் பல இடங்களிலும் வெவ்வேறு சாதிக்காரர்களை செயலாளர் மட்டங்களில் இணைத்துக்கொண்டதாலும்  எல்லாவற்றையும் விட தனது கட்சிப் பெயரின் காரணமாகவும் ‘வன்னியர்’ கட்சி என்கிற பேரை வேறோர் பூச்சு கொண்டு மறைத்திருக்கிறது.அவர்கள் தனக்கென பத்துப்பதினைந்து இடத்தைப் பிடித்து ‘ஊசல்த் தேர்வு’ நிலையை தமிழக முடிவுகள் தருமானால் பலமான கட்சியாகக் கூட மாறமுடியும்.

பா.ம.க வின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைக் கவனித்து வந்த ‘கவுண்டர்’களுக்கு தனிக்கட்சி ஆசை வந்தது வியப்பில்லை. கலாசார ரீதியில் செய்வதற்கு அவர்களுக்கு எவ்வளவோ பணிகள் இருப்பினும் வாக்குத்தேர்தல் வசீகரித்து பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை துருப்புச்சீட்டாக்கி (இரு கூட்டணிகளிலுமாக) ஏழெட்டு சீட்டுகளைப் பெற்றுவிட்டார்கள். அவர்கள் இரண்டு சீட்டுகளுக்குமேல் வெல்லமுடியாது என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் வெற்றியோ ஸ்ரீதர் வாண்டையாரின் வெற்றியோ அந்தந்தக் கழகத்தின் வெற்றியாகப் பாவிக்கப்பட்டாலும் ‘நீயில்லாமல் நானில்லை’ என்கிற ஆழ்ந்த பிணைப்புக்கொண்டதாகவே அந்த வெற்றிகள் இருக்கும். அ.தி.மு.க தேவர்களின் கட்சியாக பாவிக்கப் படுவதற்கு சசிகலாவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

ஜான் பாண்டியன் ஒரு படுகொலை காரணமாக தனது இயக்கத்தைக் கொன்றேவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். புதிய தமிழகம் தனது இரண்டு சீட்டுகளின் வெற்றிதோல்வியைக் கொண்டுதான் எதிர்காலத்தின்மீது பயணிக்க இயலும்.

அண்ணாச்சிகள் அள்ளிக்கொள்ளுமளவு பணமும் சொல்லிக்கொள்ள கு,காமராஜரும் இருப்பதால் தனியாக சீட்டுப் பெற்றுவிட்டார்கள். தி.மு.கவில் பெற்றது ஒரு சீட்டுதான் எனினும் அடையாள ரீதியில் இது கவனம் பெறும் முயற்சியும் செயல்பாடும் ஆகும், இதில் சரத்குமாரின் அதிர்ஷ்டம் இரண்டு சீட்டுகள் பெற்றது. நாடார் என்பதற்காக ஒன்று நடிகர் என்பதற்காக ஒனறு.

கார்த்திக்கிற்கு எத்தனை சீட்டுகள் என்பது தெரியவில்லை. இப்போதெல்லாம் மனிதர் கொஞ்சம் பக்குவமாகப் பேசுகிறார். முத்துராமனுக்கும் முத்துராம லிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவும்கூடும். எப்படி இருந்தபோதும் தமிழ் நாட்டில் ஃபார்வார்டு பிளாக்கின் சமாதிக்கு கடைசிக்கற்கள் எடுத்து அடுக்கியவர்களின் பட்டியலில் அவரது பெயரும் உண்டு.

விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு அறிவாளி எம்.எல்.ஏக்களைப் பெற்றதன் மூலம் தமிழ்நாடு முழுதும் பரவலாக அறியப்பட்டதும் பரவிவிட்டதும் ஆகிவிட்டது. கடந்த முறை அவர் நிறுத்திய வேட்பாளர்கள் பட்டியல் அதையும் சாதிக்கட்சியாகவே காட்சியது. இந்த ஒதுக்கீடுகளில் விழுக்காட்டுக் கணக்குப் போட ஏதுவாக 10 இடங்கள் அதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. திருமா இதுவரை என்னவாக இருந்தார் என்பதை அவரது செயல்பாடுகள் காட்டிவிட்டன. இனியும் என்னவாக இருப்பார் என்பதை பட்டியல் காட்டிவிடும்.

இதுகாறும் பெயர் சொல்லாமல் நடந்துகொண்டிருந்த ஒதுக்கீடுகள் இப்போது பெயரைச் சொல்லி நடக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால் ‘’ எங்க எம்.எல்.ஏ’’ என்று தொகுதியைச் சொல்லி உரிமை கொண்டாடும் வாக்காளர் மனம்.  இனி ‘’ எங்க எம்.எல்.ஏ ‘’ என அழைக்கப் பெறுபவர்கள் யாராக இருப்பார்கள் என எண்ணும்போது.....

‘கட்சி கட்டுதல்கள்’ ஏற்படும் ரூபங்கள் அத்தனை உவப்பானதாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காலம் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கி நகர்ந்தாலும் ஒரே விளைவுதானோ எனக் கேள்வியாக இருக்கிறது.

No comments: