Thursday, March 17, 2011

காலம் வரும் வரை கருவியை....

தமிழகத்தில் மூன்றாவது அணி பற்றிய பேச்சும் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கிளம்புவதுதான். ஆனால் 3வது அணியைப் பொருத்தவரையில் ஒவ்வொரு முறையும் ’வரூம்...ஆனா வராது’ கதைதான். மூன்றாவது அணிபற்றிய எதிர்பார்ப்பு தலைதூக்குவதற்குக் காரணமாயிருப்பவர்கள் அனேகமாக எப்போதும் கம்யூனிஸ்டுகள்தாம்.
தனது தீராத பக்கங்கள் வலைப்பதிவில் மாதவராஜ் ‘கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்’ என இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறார். விரிவானதாக அல்லாவிட்டாலும் செறிவான பதிவுகள். ஜெயலலிதாவிடம் போய் நிற்பது பிரச்னை அல்ல. நிர்பந்தம். ஆனால் ஜெயலலிதா சொன்ன இடத்தில் ‘நிற்பது’ என்கிற அளவிற்கு அவர் கொண்டுவந்து வைத்துவிடுவார்.

ஜனநாயகம் என்பதை பாவனை நிலையில் கூட அனுசரிக்காத அவரது போக்கின் வெளிப்பாடே இன்று ‘தன்னிச்சை’யாக அவர் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டமை ஆகும். கருணாநிதியைப் பொருத்த அளவில் பொதுக்குழு செயற்குழு எனப் பலபேர்கள் சொல்லி ஜனநாயகக் காட்சியை திற்ம்பட நடித்துக் காட்டி நடத்திக்காட்டி இறுதியில் தனக்குச் சாதகமான முடிவை எட்டுவார். குறைந்த பட்சம் தொழிற் கூட்டாளிகளிடம் கலந்துகொள்கிற பண்பு ( அதை கழகத்தினர் மாண்பு என விளிப்பர்) அவரிடம் உண்டு. முழுக்கவும் அவரது பாச்சா பலிக்காமற் போயிருப்பது நாயன்மார்களிடம்தான். அதாவது அறுபத்து மூவரிடம்.

எதிரணியில் ம.தி.மு.க வுக்கு ஒரு ‘ஆழ்வார்கள்’ (பன்னிரெண்டு பேர்) கோஷ்டிக்கு கிடைத்திருந்தால் கூட இன்றைக்கு மூன்றாம் அணிப்பேச்சு இப்போது வலுவடைந்திருக்காது.  சூழல் என்னவென்றால் கார்த்திக் எல்லாம் மூன்றாவது அணிக்கு தோள் கொடுத்துத் தூணாக விளங்கும் நிலை வந்துவிட்டது.

உண்மையில் விகிதாசார முறையை அமல்படுத்துவதில் ஜெயலலிதாதான் முன்கை எடுப்பார் போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கும் வை.கோ வுக்கும் அவர் தொகுதிப் பங்கீடு சொன்னவிதத்தில் அது வெளிப்படுகிறது. வாய்ப்பு இருந்தும் மந்திரி பதவிகள் கிடைக்காவிட்டால் உறுப்பினர்கள் என்னவென்ன செய்து காட்டுவார்கள் என்பதை கோபால்சாமியின் கண்ணான கண்ணானவர்கள் நிரூபித்துக்காட்டினார்கள். ஓரிரு தேர்தல்களுக்கு எம்.எல்.ஏ , எம்.பிக்களும் இல்லாது போய்விட்டால் கட்சி என்ன ஆகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மூன்றாவது அணி அமைக்கப்பெற்றால் அது தொகுதிகள் தோறும் இருபது சதவீத வாக்குகளைத்தாண்டி பெறப்போவதில்லை. ஆகவே இம்முறை ஜெயலலிதாவை அனுசரித்துப்போவது ஒன்றே மாற்று. அல்லது மூன்றாவது அணி அமைத்து தொங்கு சட்டமன்றக் காட்சிகளையும் பார்க்கலாம். மூன்றவது அணி அமைக்கும் அளவு தைரியம் இருப்பின் விகிதாசார முறைத் தேர்தல் குறித்துக் குரல் கொடுக்கலாம் நாம்.

1 comment:

Pranavam Ravikumar said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!