Wednesday, April 6, 2011

திசையிலி

எழுந்து விடிந்த காலை
ஒரு அவதினத்தைப் போல
உணர்வளித்தால் என்ன
செய்ய இயலும்?

முட்டிக்கொண்டு சாகலாம்
போல நரம்புகள் தெறிக்கிற
இந்த நாளின் ஆரம்பத்தை
என்ன செய்து
சீரமைக்க முடியும்.

முடிவற்றதும் நீங்கவே
நீங்காததுமான
உறைவுத் தோற்றத்தினூடே
பகல் வெளிச்சம் விஷமெனப்
பாரித்திருக்கிறது.

பொழுதின் எந்த நேரத்துக்
கதிர் உயிர்ப்பின் சிறு
துளியைக் கொண்டு வரும்
எனக் காத்திருத்தலில்
கண் அயர்ந்தே கிடக்கிறது
இருப்பின் சோர்வு.

தேநீரைத்தான் எத்தனை முறை
அருந்துவது. இப்படித் துவங்கும் எனில்
சூரியனைக் கழுத்தை
நெரித்திருப்பேன், அது மண்டைக்கும்
சற்றே
கீழாகத்தான் இருந்தது,

செய்ய ஏதுமில்லாக்
கைகளின் கண்கள்
எத்தனையோ பலநாட்கள் மாதிரி
இன்றும் பார்த்தே கழித்துவிட
ஆயத்தமாகிவிட்டன.

மீண்டும் ஒரு தேநீர், ஒரு
மூன்று முறை மூத்திரம்
பெய்தபின் ஏதேனும்
மாற்றம் தெரியக்கூடலாம். 

No comments: