Sunday, May 15, 2011

ஆரூர்த் தேரும் அரங்கன் கோபுரமும்

தமிழகத்தின் புதிய - அல்லது பழைய - முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுபடியும் பதவியேற்கிறார்.

எதிர்க் கட்சித் தலைவராக விஜய காந்த்.

 ஒருவேளை கருணா நிதியே வந்திருக்கக் கூடியதுதான். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாக இருந்தவர் ஏமாறா மன்னனாக ‘ஆற்ற’ இயலாத போய்விட்டது. ஒருவேளை குடியாட்சி மன்னராக இருந்து செய்து கொள்ள வேண்டிய வசதி வாய்ப்புகளை போதுமான அளவு பெருக்கிக்கொண்டாரோ என்னவோ? மீண்டும் ஆட்சிக் கட்டிலில் இல்லை என்பது இழப்புதான்.

இந்தச் சரிவு தி.மு.கழகத்தை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் பின்னகர்த்தியிருக்கிறது. வெற்றி வேட்பாளர்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இதை மொழிகிறேன். ஒரு விதத்தில் ஜெயலலிதாவின் சேவல் கூவிய காலத்தின் எண்ணிக்கையை நினைவூட்டுகிற மாதிரி இன்று உதய சூரியன் வந்திருக்கிறது.

ராஜீவின் மரணம்- இந்திரா காந்தி அல்லது மூப்பனாருடன் கூட்டு என்பது மாதிரி சில தருணங்களில் அ.தி.மு.க அல்லது தி.மு.க இரண்டுக்குமே  இப்படியான ‘பெருக்கித் துடைக்கப்பட்ட வீழ்ச்சிகள்’ கிடைத்துத்தான் இருக்கின்றன.

ஆனால் இம்முறை மிகுதியானதும் வலிவானதும் என நம்பப்பட்ட கூட்டணிகள்; சாதீயக் கட்சிகளுடன் கூட்டு என பலவிதப்பட்ட வியூகங்களைத் தாண்டி பெற்றுக்கொண்ட இந்தத் தோல்வி கருணா நிதி உள்ளிட்ட கழகத்தினரை கடுமையாக சிந்திக்கவைக்கும்.

எதிர்க் கட்சிக்குக் கூட லாயக்கில்லாத  கழகத்தின் ‘ இம் முடிவு’ புதிய தெம்பை ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் தந்திருக்கும். இந்தத் தெம்புடன் தரப்பட்ட மற்ற உள்ளுறைச் சங்கதிகளையும் கணக்கில் கொண்டு அவர்கள் பணிபுரிவது அவசியம்.

உள்ளூரில் நின்று வென்ற இரு தலைவர்களையும் வாழ்த்தி திரு. வாலி அவர்கள் பாட்டு எழுதினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய சுகமாக இருக்கிறது.

கருணா நிதி;

 நிலையில்
நிற்கின்ற தேரும்
அதன் பருவத்தில்
ஓடிவரும் என்பதற்கு
நீ எடுத்துக்காட்டு. அதை
உலகத்திற்கு
எடுத்துக்காட்டு.


ஜெயலலிதா:

உறங்குகிறாய் என
உலகம்
உன்னியிருந்தது
அறி துயிலாகும்.
உன் இமையை
விரித்துவிட்டால்
ஆதி சேடனும்
ஆகிடுவான் உன்
பாதி சீடன்.

No comments: