Wednesday, June 1, 2011

ஒரு கவிதையும் சமச்சீர் கல்வியும்

பள்ளிக் குழந்தைகள் எல்லாம் பதினைந்து நாள் உபரி விடுமுறையில் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்தப் பதினைந்து நாளை அனுபவிக்க விடாமல் டியூசனுக்கோ அல்லது ‘தங்கள் நிலையில் உத்தரவாதமாகவும் உறுதியாகவும் இருக்கிற பள்ளிக்கோ போகும் பிள்ளைகள் தங்கள் வரலாற்றின் பலனை அனுபவிக்கிறார்கள்.

சிலபல கோடிகளை செலவு செய்து புதிய (அல்லது பழைய ) புத்தகங்கள் அச்சிடப் பட்டுக்கொண்டிருக்கின்றன. ’எனது கவிதயை வேண்டுமானால் நீக்கிவிட்டு பாடத்திட்டத்தை அமலாக்குங்கள் ‘ எனக் கருணாநிதி கேட்டுக்கொண்டார். அப்படியாயிருப்பினும் புதிதாக அச்சிட்டுத்தான் ஆகவேண்டும். தாளைக் கிழித்துவிட்டு பாடப் புத்தகத்தை அப்படியே தொடரும் கல்வி முறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

ஒன்று விளங்குகிறது.(நீண்ட காலப் பார்வையற்று) தேவையற்ற செலவுகளுக்கு வழி வைப்பதாகவும், தேவையான செலவுகளைச் செய்யாமல் விடுவதாகவும்தான் நமது அரசியல் மற்றும் கல்விக்கான பிணைப்புகள் இருக்கின்றன.
.
;இன்றைய செய்தி நாளைய வரலாறு ’ என்பதைப் புரிந்துகொண்ட தி.மு.க அவர்கலுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை முயன்றிருக்கக் கூடும் என்பதும் அச்சங்களில் ஒன்றுதான். ஆனால் ஜெயலலிதா நேற்றுத் தெரிவித்துவிட்டார்... கவிதை காரணமல்ல. ஒட்டு மொத்த கல்வியியல் நோக்கத்தின் அடிப்படையில்தான் பாடத்திட்டம் மாறுகிறது என.

தனியார் கல்விப் புலத்தில் ஃபீஸ்கள் மற்றும் பீசுகளில் அவர் தலையிடப் போவதில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்கள் அரசுப் பள்ளிக் கல்வியைப் புறக்கணிக்கிற நிலைப் பாட்டை எடுத்தபின் . தாங்கள் போய்ச்சேர்ந்த நிறுவங்களிடம் ‘காசைக் குறை’ என்று சண்டை போடுவது என்ன வித நியாயம் எனத் தெரியவில்லை.( சும்மா சொல்லிக் கொடுக்க அவன் என்ன மாமனா மச்சானா....)

யோசித்துப் பாருங்கள் அதிகமாகப் பத்தும் இருபதும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்களிடம் பிள்ளைகளைப் படிக்கப் போடாமல் நான்கும் ஐந்தும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் பள்ளிகளில் ‘நீங்கள் காசும் கொடுத்து’ப் படிக்கப் போடுகிறீர்கள் என்றால்.... இடையில் நடப்பதுதான் என்ன.

அரசுப் பள்ளியில் படிப்போருக்கு அறுபது சதம் ஒதுக்கீடு என்பது மாதிரி சட்டம் வந்தால் கூட ஒப்புக்கொள்ளலாம் என்பது மாதிரி தோன்றுகிறது.
அனைவருக்கும் கல்வி இலவசம், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை,மந்திரி மகனும் கூலித் தொழிலாளி மகனும் கலெக்டர் மகளும் ஒரே பள்ளிக்கூடம் (உடைகள் உட்பட அப்போது அரசின் பொறுப்புக்கு வந்துவிடக்கூடும்).

இந்த நிலைமை வராமல் சமச்சீர் கல்வி என்பது சாத்தியமல்ல என்றுதான் நினைக்கிறேன். சமச் சீர் என்பது நமது பெயரிடும் ஆர்வத்தால் உச்சரிக்கப்படுகிறது.

‘சமன் செய்து சீர் தூக்கி அங்கே ஒருபால் கோடாமை கோடி பெறும்.’

ஆரோக்கியமான கல்வி மறுக்கப்படுகிற கோட்டுவிளிம்பில்தான் எத்தனை கோடிப்பேர்.

No comments: