Tuesday, June 21, 2011

தொலைத்த ஒரு கவிதை

கவிதைக்குள் போகுமுன்னரே அதைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிடுதல் உத்தமம். பெயரில்லாமல் ஒரு கவிதை பிரிண்ட் அவுட் வடிவில் என்னிடம் கிடக்கிறது. சொந்தப் பைகளில் பழைய பேப்பர் பொறுக்குவதில் கிடைத்தது.கவிஞர் யாரென யூகிப்பதில் மொழி சார்ந்து அல்லாமல் வாழ்வியல் தொடர்பு சார்ந்து அது   ‘தூரன் குணா’அவர்களின் கவிதை என ஆலோசிக்கிறேன்.

வளர்சிதை மாற்றங்கள் பெற்ற நிலையில் இன்றைய அவரது கவிதைகள் இதுபோல இல்லை. இதுபோன்ற தருணங்களும் அவருக்கு வாய்க்கும் நிலையிலுமவர் இப்போது இல்லை. அவரது சேமிப்புக் கோப்பில் இல்லாமல் என்னிடம் இது தங்கியிருப்பின் இது பேறு.

தொலைந்த ஒரு மணி நேரம்
_________________________________

பொங்கல் அவ்வருடம் திங்கட்கிழமை
வேறு மாநிலத்திலிருக்கும் எனக்கோ
விடுமுறை இல்லை

இரு தினங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு
நிரம்பி வழியும் பலபஸ்கள்
மாறி வீடு சேர்ந்தேன்

தந்தை இல்லாத மாலையின்
ஒரு மணி நேரத்தை
எனக்களிப்பதாய் சொல்லியிருந்தாய்

புன்னகையின் தீபமேந்தி வந்திருந்தாய்

வேலையைப் பற்றி
இரவை உண்ணும் கொசுக்கள் பற்றி
ஒவ்வாமல் போகும் உணவு பற்றி
அறை நண்பர்களின் குறட்டை பற்றி
மாதக் கடைசியின் பற்றாக்குறை பற்றி
பயணக் களைப்பைப் பற்றி

இலையுதிர் காலத்து மரத்தளவு
வார்த்தைகளை உதிர்த்தபடி இருந்தேன்

சிரித்தபடி கரங்களை
கன்னங்களில் தாங்கிக் கொண்டு
கேட்டுக் கொண்டிருந்தாய்

மெள்ள இரவு தூவப்படுகையில்
விடைபெற்றுப் போனாய்

வலதுபக்கம் சரியும் பாதையில்
புள்ளியாய் நீ மறையும் வரை
முதுகு பார்த்தபடி இருந்தேன்

இடது பக்கம் மேடேறிச் செல்லும்
எனது நிழல் விழுந்த பாதையில்
நடந்தபோது நினைத்துக் கொண்டேன்

அந்த முறையும்
சொல்லாமல் விடப்பட்ட
எனது பிரியத்தை
எனது காதலை
__________________
___________________

இவ்வளவுதான். ஆனாலும் தன்மையிற் கவி சொல்லும் இந்தக் குரல் ஆணானதோ பெண்ணானதோ எதுவாக இருந்தாலும் (அறை நண்பர்களின் குறட்டை ஒலியிலிருந்து அது ஆண் என்று தெளிவாகிறது)  எதை எதைப் பற்றியெல்லாம் பேசுகிறது என்கிற பட்டியலைப் பார்க்கிறபோது... குறைந்த பட்சம் 7x7 நாற்பத்தி ஒன்பது ஜன்மங்களுக்கு காதலைச் சொல்ல இயலாது என்றுதான் தோன்றியது.

No comments: